158 ஆண்டு கால "அடல்டரி" சட்டம்.. நீதிபதிகள் சொன்னது என்ன?
Recommended Video
டெல்லி: கடந்த 158 ஆண்டுகளாக நீடித்து வந்த அரசியல் சட்டத்தின் 497வது பிரிவை (அடல்டரி சட்டம்) நீக்கியுள்ள உச்சநீதிமன்றம், இந்த சட்டப் பிரிவு பெண்களுக்கு முற்றிலும் எதிரானது என்று வர்ணித்துள்ளது.
இந்த சட்டப் பிரிவை சட்டவிரோதமானது என்று கூறி இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. தீர்ப்பின்போது நீதிபதிகள் தனித் தனியாக கருத்துக்களைக் கூறினர். ஆனால் தீர்ப்பு ஒருமனதாக இருந்தது.
நீதிபதிகள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா - நீதிபதி கான்வில்கர் (இருவருக்கும் சேர்த்து தீபக் மிஸ்ரா கூறிய கருத்து)
தனி நபரின் கெளரவத்தையும், பெண்களின் சமத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் எந்த சட்டமானாலும் அது அரசியல் சாசனத்திற்குப் புறம்பானதாகும். கணவருக்கு பெண் அடிமை இல்லை என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. யார் யாருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சட்டமயமாக்குவது தவறானதாகும். அரசியல் சட்டப் பிரிவு 497 முற்றிலும் தவறானது, எதேச்சதிகாரமானது.
நீதிபதி ரோஹின்டன் நாரிமன்:
அரசியல் சட்டத்தின் 497 பிரிவு அது உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை இப்போது இழந்து விட்டது. பழங்காலத்தில்தான் ஆண்களுக்கு பெண்கள் அடிமைகளாக இருந்தனர். கள்ளக்காதலுக்காக பெண்களை தண்டிப்பது என்பது தவறானது. ஆண்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டவே இது பயன்பட்டுள்ளது.
நீதிபதி சந்திரசூட்:
பெண்களின் கண்ணியத்தை அழிக்கும் வகையில் உள்ளது 497வது பிரிவு. தனக்குப் பிடித்ததை தேர்வு செய்ய விடாமல் அது பெண்களை தடுக்கிறது. ஒரு பக்கம் பெண்களைப் போற்றிக் கொண்டு மறுபக்கம் பெண்களை அவமதிப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிபதி இந்து மல்ஹோத்ரா:
497வது பிரிவு, ஒரு மிகப் பெரிய பாரபட்சமான சட்டப் பிரிவு. பெண்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.