”ஆட்டம் இன்னும் முடியல..” ஜனாதிபதி தேர்தலுக்கு மம்தா பானர்ஜி போடும் பிளான்.. பாஜகவுக்கு நேரடி சவால்
கொல்கத்தா: நாட்டில் பாதி எம்.எல்.ஏக்களை கூட வைத்திருக்காத பாரதிய ஜனதா கட்சிக்கு இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தல் அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது பேசிய மம்தா பானர்ஜி, "சமாஜ்வாடி போன்ற கட்சிகள் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும், கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் இடங்களில் வெற்றிபெற்று உள்ளன.

ஆட்டம் இன்னும் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிபேர் கூட பாஜகவை சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே இம்முறை குடியரசுத் தலைவருக்கான அவ்வளவு எளிதாக இருக்காது." என்றார்.
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வரும் காவல்துறையை பாராட்டுகிறேன்.எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் கேலிக்கூத்தாக இருக்கின்றன." என்றார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் கொல்லப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்த அவர், "காவல்துறை வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அரசியல் பாகுபாடு பார்க்காமல் தீவிர நடவடிக்கை எடுப்போம்." என்றார்.
மம்தா பானர்ஜியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள், ஜெய் பங்களா! பாரத் மாதா கி ஜே! என முழக்கமிட்டவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications