சுப்ரீம்கோர்ட்டில் நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தமிழகத்திற்கு ஷாக்! ஏன் தெரியுமா? #cauvery
டெல்லி: காவிரி பாசன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப குழு இன்று தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் பல அம்சங்கள் கர்நாடகாவுக்கு சாதகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மற்றும் தமிழகத்திலுள்ள காவிரி பாசன பகுதிகளில் நீர் இருப்பு மற்றும் நீர் தேவையை ஆய்வு செய்ய, மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ்.ஷா தலைமையில், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதில்,தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றனர்.
இரு மாநிலங்களிலும் இக்குழு ஆய்வு செய்து, சுப்ரீம்கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை நகல், இரு மாநில வழக்கறிஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே நாளை காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது இரு மாநிலங்களும் வாதம் முன் வைக்கப்போகின்றன.
இந்த அறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:
- அடுத்த ஆண்டு மே மாதம்வரை, கர்நாடகாவிற்கு, 65.48 டிஎம்சி தண்ணீர் தேவை. தமிழகம், புதுச்சேரிக்கு 143.18 டிஎம்சி தண்ணீர் தேவை.
- கர்நாடக காவிரி நீர்பிடிப்பு அணைகளில் தற்போது 22.90 டிஎம்சி தண்ணீர் உள்ளது. மேட்டூர் அணையில் 31 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
- தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலுமே, நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழ் போய்விட்டது.
- இரு மாநில விவசாயிகளுமே, மழையில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள், சம்பாவுக்கு நாற்றுவிட முடியவில்லை என கூறுகிறார்கள். கர்நாடகாவிலும் பயிர்கள் காய்ந்துள்ளன.
- தமிழகத்தில் கால்நடைகளுக்கு நீர் இல்லை, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.
- வட கிழக்குப் பருவ மழையை சேமிக்க தமிழக கடலோர மாவட்டங்களில் ஏரி, குளம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குழுவின் அறிக்கைகள் கர்நாடகாவுக்கு சாதகமாக இருப்பதாகவே தெரிகிறது.
ஏனெனில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என தொடர்ந்து கர்நாடகா கூறிவருவதற்கு முக்கிய காரணமாக அது முன் வைப்பது, தங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை என்பதைத்தான். நிபுணர் குழு தனது அறிக்கையில், கர்நாடகாவிற்கு அடுத்த ஆண்டு மே வரை 65.48 டிஎம்சி தண்ணீர் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், நீர் இருப்பு 22.90 டிஎம்சி மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே மேற்கொண்டு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் எப்படி உத்தரவிடும்?
தமிழகத்தில் வறட்சி இருப்பதாக நிபுணர் குழு அறிக்கை கூறினாலும்கூட, அக்குழுவே ஒரு தீர்வையும் முன் வைக்கிறது. அதாவது வட கிழக்கு பருவமழையை தமிழகம் சேமித்து வைக்க ஏரி, குளங்களை அமைக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்வு. வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் இனிதான் ஆரம்பிக்கப்போகிறது. ஆனால் கர்நாடகாவிற்கு, இவ்வாண்டில், இனி பருவமழையில்லை என்பது கர்நாடக வாதம். நிபுணர் குழுவும் அதே தொனியில் அறிக்கையளித்துள்ளது.
தமிழகம், ஏரி, குளங்களை வெட்டி தண்ணீரை சேமித்துக்கொள்ளலாம், ஆனால் கர்நாடகாவால் அது முடியாதே.. என கூறிவிட்டது இந்த அறிக்கை. இது நாளைய விசாரணையின்போது தமிழகத்திற்கு பின்னடைவையே தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.