அமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. அவரால் சுயமாக பேச முடிவதில்லை.. போட்டு தாக்கும் ராகேஷ் டிக்கைட்
இந்தூர்: வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை மறைமுகமாக தாக்கிப் பேசிய ராகேஷ் டிக்கைட், மக்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவருக்கு உண்மையில் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்றும் அவரால் சுயமாக எதையும் பேச முடிவதில்லை என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது 100ஆவது நாளை கடந்தும் தொடர்கிறது.
விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் கிசான் மகா பஞ்சாயத்து என்று நிகழ்ச்சியையும் விவசாயிகள் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும் விவசாய தலைவர்கள், மத்திய அரசின் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குகின்றனர்.
ஒரு லட்சம் டிராக்டர்கள்
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், "குடியரசு தினத்தன்று நாங்கள் 3,500 டிராக்டர்களுடன் மாபெரும் பேரணியை வெற்றிகரமாக நடத்தினோம், அதேபோல தேவைப்பட்டால் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவும் தயாராகவே உள்ளோம்" என்றார்.
டிராக்டர் பேரணி குழப்பம்
மத்திய அரசுக்கு எதிராகக் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இதில் வெளியாட்கள் சிலர் புகுந்ததால் திடீரென குழப்பம் ஏற்பட்டது. அப்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல போலீசார் தரப்பிலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கிருந்த கொடிக்கம்பத்தில் விவசாய அமைப்புகளுக்கு ஆதரவான கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.
அதிகாரம் இல்லாத அமைச்சர்
வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரையும் தனது உரையில் ராகேஷ் டிக்கைட் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். அதாவது, மக்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவருக்கு உண்மையில் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்றார். மேலும், அவரால் சுயமாக எதையும் பேச முடிவதில்லை என்றும் ஒவ்வொரு முறையும் கோப்புகளைச் சென்று பார்த்துவிட்டு தான் பதில் கூற முடிகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
உடன்பாடு இல்லை
விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க தலைவர்களுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அடுத்த 18 மாதங்களுக்கு விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.