அனந்தநாக்கில் முதல் கட்ட வாக்கு பதிவு... வாக்காளர்களை விட அதிகம் உலவிய காக்கிகளும், துப்பாக்கிகளும்!
காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை விட துப்பாக்கி ஏந்திய போலீஸாரே அதிகம் காணப்பட்டனர். இதன் மூலம் எத்தனை பதற்றமான தொகுதி அது என்பது தெளிவாகிறது.
அனந்தநாக் தொகுதி மிகவும் பதற்றமான தொகுதி என்பதால் இங்கு 3 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 13.61 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதற்றமான தொகுதியான இங்கு மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது போன்று அமைதியாக தேர்தல் நடத்த உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினரையும் முதன்மை தேர்தல் அதிகாரி பாராட்டியுள்ளார்.

16 சட்டசபை தொகுதி
இங்கு மொத்த வாக்காளர்கள் 5.27 லட்சம் பேர் உள்ளனர். மொத்தம் 16 சட்டசபை தொகுதிகளை கொண்டது அனந்தநாக். இவற்றில் பெரும்பாலான தொகுதிகள் பதற்றமானவைதான்.

தீவிரவாத தாக்குதல்கள்
இதுவரை இந்தியாவில் எந்த தேர்தலிலும் ஒரு தொகுதிக்கு மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்ற வரலாறு இல்லை. இந்த தொகுதிக்குள்பட்ட ஷோபியன், புல்வாமா உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம்.

புல்வாமா தாக்குதல்
புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல் இந்தியா உரிய பதிலடி கொடுத்ததால் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் திருப்பி தாக்கலாம் என்பதால் அங்கு பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

100 பேர் பலி
அனந்தநாக்கில் ஹிஸ்புல் முஜாஹூதீன் தலைவர் பர்ஹான் வாணியை போலீஸார் சுட்டுக் கொன்றதால் அவரது இறுதி ஊர்வலத்தின் போது ஆதரவாளர்கள் கலவரம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இங்கு எப்போதும் கல்வீச்சு, கலவரம் என பரபரப்பாக இருக்கும். எனவே முதல் கட்ட தேர்தலின் போது வாக்காளர்களை விட துப்பாக்கி ஏந்திய போலீஸாரே அதிகமாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications