செல்போன், லேப்டாப் திருடிய வாலிபரை அடித்துக் கொன்று ஆணுறுப்பை அறுத்த பயிற்சி மருத்துவர்கள்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் மருத்துவமனை தங்கும் விடுதியில் நுழைந்து செல்போன் மற்றும் லேப்டாப்பைத் திருடிச் சென்ற நபரை, பயிற்சி மருத்துவர்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நில் ரதன் சிர்கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தங்கும் விடுதியில் பயிற்சி மருத்துவர்கள் தங்கி உள்ளனர். கடந்த ஓராண்டாக இந்த விடுதியில் இருந்து செல்போன் மற்றும் லேப் டாப் போன்றவை திருடு போவது வழக்கமாக இருந்துள்ளது. ரூ 20 லட்சம் மதிப்புள்ள 50- முதல் 60 லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் இதுவரை திருடு போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 28 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் விடுதிக்குள் நுழைந்து, பயிற்சி மருத்துவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப் திருடிகொண்டு தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட பயிற்சி மருத்துவர்கள் திருடனை துரத்திப் பிடித்து அடித்தனர்.
இதில், அந்த வாலிபர் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விரைந்து வந்த போலீசார் அவ்வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அந்த வாலிபர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சில ஜூனியர் டாக்டர்கள் உட்பட சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த வாலிபரை பயிற்சி மருத்துவர்கள் விடுதியின் விளையாட்டு அறைக்குக் கொண்டு சென்று, அவரது மர்ம உறுப்பை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி எடுத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட ஒரு குழுவை மருத்துவமனை நிர்வாகம் அமைத்து உள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சட்டம் அதன் கடமையை செய்யும்' என்றார்.