கென்யா வெஸ்ட்கேட் தாக்குதலில் மேலும் ஒரு இந்தியர் பலி: பெங்களூர்காரர்
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலில் அல் ஷபாப் தீவிரவாதிகள்
நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 68 பேர் பலியாகினர். இதில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் பேங்க் ஆப் பரோடாவின் நைரோபி கிளை மேனஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகியோர் அடக்கம். காயமடைந்த ஸ்ரீதரின் மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இறந்தவர்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுதர்ஷன் பி. நாகரஜும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து வெஸ்ட்கேட் தாக்குதலில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
நாகராஜ் கடந்த 20ம் தேதி தான் வியாபார நிமித்தமாக நைரோபி சென்றுள்ளார். கடந்த 22ம் தேதி மாலுக்கு சென்றபோது தீவிரவாதிகள் தாக்கியதில் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அவரது உறவினர்கள் நைரோபியில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.