ஜே.என்.யூ. போராட்டத்தில் கருத்து வேறுபாடு: பாஜக சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு நிர்வாகிகள் ராஜினாமா
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவின் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) நிர்வாகிகள் மூன்று பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
ஜே.என்.யூ. பல்கலை வளாகத்தில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் புகார் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லி ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராக வந்த கன்யாகுமாரை பாஜக எம்.எல்.ஏ. ஷர்மா தலைமையிலான கும்பல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வெறித்தனமாக தாக்கியது. இந்த வழக்கு குறித்து செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜேஎன்யுவில் நடைபெற்ற மாணவர் போராட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜேஎன்யுவில் ஏபிவிபி அமைப்பில் இருந்து விலகுவதாக மூன்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக் கழக சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த அந்த அமைப்பின் இணைச் செயலாளர் பிரதீப், செயலாளர் ராகுல் யாதவ், தலைவர் அன்கித் ஹன்ஸ் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இது குறித்து நேற்று அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் குற்றம் செய்திருந்தால் அவரை நீதிமன்றம் விசாரித்து தண்டிக்கலாம். இதற்காக ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழத்தின் மீதும், மாணவர்கள், ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தும் போக்கை ஏற்க எங்களால் ஏற்க முடியவில்லை.
இந்தியாவிலேயே தேசபக்தி அதிகமுள்ள கல்வி நிலையம் ஜேஎன்யு ஆகும். இங்கு நடைபெற்ற போராட்ட விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் ஏபிவிபி அமைப்பில் இருந்து கருத்துரீதியாக வேறுபட்டுள்ளோம். இது எங்கள் தனிப்பட்ட முடிவு. வேறு யாருடைய தலையீடும் இதில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.