ராஜஸ்தானிலும் தொடரும் நீட் பலி! ஒரே நாளில் மூவர் தற்கொலை.. "காரணம் தெரியவில்லை".. போலீஸ் கைவிரிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு பீகாரை சேர்ந்த அங்குஷ் ஆனந்த் (18), உஜ்வல் குமார் (17) என இரண்டு மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். அதேபோல மத்தியப் பிரதேசத்தை பிரணவ் வர்மா (17) எனும் சிறுமியும் இதில் பயின்று வந்துள்ளார்.
திமுக ஆட்சி சூப்பர்! மக்கள் அழைத்தால் நான் அரசியலுக்கு வருவேன்! லெஜெண்ட் சரவணன் பளிச்!
போட்டி தேர்வு
இவ்வாறு இருக்கையில், மாணவர்கள் இருவரும் தங்களது அறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல மாணவியும் விஷமருந்தி உயிரிழந்துள்ளார். இவர்கள் மூவரில் ஆனந்த் மற்றும் பிரணவ் வர்மா ஆகியோர் நீட் தேர்வுக்கும் உஜ்வல் குமார் JEE தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் ஒரே நாளில் மூவர் உயிரிழந்திருப்பது பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. "பீகாரை சேர்ந்த இரண்டு மாணவர்களும் நீண்ட காலமாக நீட் மற்றும் JEE தேர்வுக்கு தயாராகி வந்துள்ளனர்.
மாணவர்கள் தற்கொலை
ஆனால் இவர்கள் தங்களது படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வகுப்புகளுக்கு அடிக்கடி லீவு போட்டுள்ளனர். பயிற்சி மையத்தில் நடைபெறும் தேர்விலும் இவர்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையில், இவர்களை ஆசிரியர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதன் பின்னரும் இந்த இரண்டு மாணவர்களும் வகுப்புகளில் சரிவர பங்கேற்கவில்லை. இவர்கள் இருவருமே ஜவஹர் நகரின் தல்வாண்டி பகுதியில் உள்ள கெஸ்ட் ஹசில் தங்கி பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று(டிச.12) காலை இவர்கள் இருவருமே அவர்கள் அறையில் ஃபேனில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளதா? அல்லது திங்கட்கிழமை அதிகாலையில் நடந்துள்ளதா? என்பது பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும்.
மாணவி பலி
இதில் உஜ்வல் குமார் சகோதரியும் இதே பயிற்சி நிறுவனத்தில்தான் பயின்று வருகிறார். அதேபோல மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி பகுதியை சேர்ந்த பிரணவ் வர்மா எனும் மாணவி இதே பயிற்சி மையத்தில் NEET தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், குன்ஹாரி பகுதியில் உள்ள விடுதியில் திங்கட்கிழமை காலை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு இதர மாணவிகள் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பிரணவ் வர்மா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அடிக்கடி தற்கொலைகள்
இவர்கள் மூவரின் விடுதிகளிலிருந்து எந்த கடிதமும் கைப்பற்றப்படவில்லை. எனவே தற்கொலைக்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே இதற்கான காரணங்கள் குறித்து தெரிய வரும்" என்று குன்ஹாரி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் கங்கா சஹய் கூறியுள்ளார். ராஜஸ்தானில் இதுபோன்ற தற்கொலைகள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2016ல் JEE தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கிடப்பில் போடப்பட்ட அரசு முயற்சி
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து 2019ம் ஆண்டு ராஜஸ்தான் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பயிற்சி மையத்தை ஒழுங்கு படுத்த திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்பதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படியான எந்த திட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.