பறக்கும் சாலை திட்டம், கச்சா எண்ணெய் கலப்பு: நிதின் கட்கரியுடன் ஆலோசித்த பழனிச்சாமி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லி: மத்திய நெடுஞ்சாலைத்துறை, கப்பல்கள் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளனர். ஞாயிறு இரவு டெல்லி சென்ற அவர் நேற்று பிரதமரை சந்தித்து பேசினார். இன்று மூன்று அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டது.
முதலாவதாக காலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை, கப்பல்கள் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை, அவரது 'டிரான்ஸ்போர் பவன்' அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக நெடுஞ்சாலைகள் சீரமைப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது மத்திய நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜாவும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத்தொகை அளிக்கும்படி தமிழக முதல்வர் வேண்டுகோள் வைத்தாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மத்திய அரசின் உதவியுடன் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 800 கிலோமீட்டர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.