'உங்க அம்மா கிட்ட கேளுங்க'.. 'அறிவே இல்லை' .. லோக்சபா விவாதத்தில் உதிர்ந்த முத்துகள்!
டெல்லி: லலித் மோடிக்கு உதவிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி லோக்சபாவில் நடைபெற்ற காரசார விவாதத்தில் அனல் பறந்தது... இதில் பேசியவர்கள் மூத்த அரசியல்வாதிகள்தான் என்றாலும் உதிர்த்த வார்த்தை முத்துகள் அப்படி காட்டமானவை...
நிதி மோசடி புகாருக்குள்ளான லலித் மோடி, இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்து வருகிறார். தேடப்படும் குற்றவாளியான அவருக்கு உதவிய செய்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றமே தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இந்த விவகாரம் குறித்து லோக்சபாவில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி மற்றும் காங்கிரஸின் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் காரசாரமாக பேசினர்..அவர்களது பேச்சில் உதிர்ந்த சில வசனங்கள்..
உங்க அம்மாவிடம் கேளுங்க...
சுஷ்மா ஸ்வராஜ்: ராகுல் காந்திக்கு விடுமுறை என்பது மிகவும் பிடிக்கும்.. அடுத்த முறை நீங்க ஓய்வுக்குப் போகும் போது உங்க குடும்ப வரலாறைப் படியுங்க..
அதற்குப் பிறகு உங்கள் அம்மாவிடம், குவாத்ரோச்சியிடம் (போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் குற்றவாளி) இருந்து எவ்வளவு பணம் வாங்கினீங்கன்னு கேளுங்க? வாரன் ஆண்டர்சனை (போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு தலைவர்) ஏன் தப்பவிட்டீங்கன்னு கேளுங்க...
உங்க கண்ணே காட்டி கொடுக்குதே..
ராகுல்காந்தி: சுஷ்மா ஸ்வராஜ் என்னுடைய கையை பிடித்துக் கொண்டு, மகனே! உனக்கு என் மீது என்ன கோபம்? நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். நான் அதற்கு, உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன்.. உங்க கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசுகிறேன்.. நான் உண்மையை பேசுகிறேன்.. நீங்க கீழே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றேன்...
தில் இல்லை
ராகுல் காந்தி: பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று உட்காருவதற்கு துணிச்சல் இல்லாதவராக இருக்கிறார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. நீங்கள் பேச வேண்டும்.. லலித் மோடி இந்த நாட்டின் கருப்பு பணத்தின் அடையாளம்...
அறிவே இல்லாத வல்லுநர்
அருண்ஜேட்லி: ராகுல்காந்தியைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு அறிவுமே இல்லாத ஒரு வல்லுநர்..ரொம்ப கஷ்டம்...