மும்பை: விஷச்சாராய பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்தது- மேலும் 2 பெண்கள் கைது
மும்பை: மும்பையில் 105 பேரின் இறப்பிற்கு காரணமான விஷச் சாராய வழக்கில் இரண்டு பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை மால்வாணியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை கூலித்தொழிலாளர்கள் வாங்கி குடித்தார்கள். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்திற்கு இதுவரையிலும் 105 பேர் பலியாகி விட்டனர். தொடர்ந்து பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, அங்கு சாராயம் சப்ளை செய்த ராஜூ லங்கடா, கவுதம், ஆர்டே, டோனால்டு பட்டேல், பிரான்சிஸ் டிமோலோ, சலீம் சேகர் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் நேற்று மம்தா லட்சுமண், அக்னீஸ் கிரேஸி ஆகிய இரண்டு பெண்கள் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதான இருவரும் சாராயத்தை சப்ளைக்கு கொண்டு வரும் வேலையை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரும் மும்பை கில்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இருவரையும் வருகிற 26-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே, குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு விற்பனை செய்யப்பட்ட சாராயம் தானே மற்றும் கல்யாண் காட்டுப்பகுதிகளில் காய்ச்சி கொண்டு வந்திருந்ததும், விற்பனைக்கு பிளாஸ்டிக் பரேல்களில் கொண்டு வரப்பட்ட சாராயம் கைதான பிரான்சிஸ் டிமோலோவிற்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார் அவரது குடோனிற்கு சென்று அங்கிருந்த 1000 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினார்கள். அந்த சாராயம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அதிகளவில் விஷத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த விஷச்சாராயத்தை குற்றப்பிரிவு போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இதுவரையில் 105 பேரை பலி கொண்ட இந்த சம்பவத்தில் கைது செய்யப்படும் அனைவர் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா உத்தரவிட்டுள்ளார்.