பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: மோடி
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.
71-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி ஆற்றிய சிறப்புரை:
தொழில்நுட்ப மாற்றத்தால் வேலைவாய்ப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பயிர் காப்பீடு திட்டத்தில் 6.75 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முத்தலாக்கை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன், அவர்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன்.
மகப்பேறு விடுப்பாக பெண்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. வேலைக்கு செல்வதை விட வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முத்ரா திட்டம் பெண்களுக்கு பலனளிக்கிறது.
மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. புதிய திசையை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.