வினோத நோயால் விபரீதம்.. எப்போதும் தண்ணீரிலேயே கிடக்கும் சகோதரர்கள்
ராஞ்சி: வினோத நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் நாள் முழுவதும் தண்ணீரிலேயே இருந்து வருகின்றனர்.
ஜார்க்கண்டில், வித்தியாசமான நோய் தாக்கத்திற்கு உள்ளான சகோதரர்கள் பெரும்பாலும் நீரிலேயே வசிக்கும் சூழ்நிலையில் உள்ளனர். நீரை விட்டு வெளியேறினால் சிறிது நேரத்தில் அவர்களின் உடல் வெப்பநிலை அதீதமாக உயர்வடைகிறது.
மேற்கு சிங்பூம் மாவட்டம் சாய்பாசா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரோஹித் சாய் மற்றும் மங்கள் சாய். பிறந்தது முதல் இவர்களின் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
இதனால், இவர்களின் உடல் வெப்பநிலை சாதாரண மனிதர்களின் உடல் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலையை குறைக்க இவர்கள் இருவரையும் அவர்களின் பெற்றோர் தண்ணீர் நிரம்பிய தொட்டி அல்லது பெரிய பாத்திரங்களில் இறக்கி விடுகின்றனர்.
இவர்களின் உடல், எப்போதும் குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால் பெரும்பாலான நேரம் நீரிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், இவர்களின் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, இந்த சகோதரர்களை பரிசோதித்த டாக்டர்கள் "இவர்கள், "எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா' என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் வெறும் 7,000 பேருக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு உள்ளது. இவ்வகை நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் வியர்வை சுரப்பிகள் வேலை செய்யாது அல்லது மிக அதிகமாக செயல்படும்.
இச்சிறுவர்களின் நிலை முதல் வகையை சேர்ந்தது. வியர்வை வெளியேறாததால் இவர்களின் உடல் வெப்பநிலை அதிகம் உயர்கிறது. இந்நோய்க்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இதனால், சிறுவர்களை, வெகுநேரம், தண்ணீர் தொட்டியில் வைப்பது அவசியம்"என்று கூறியுள்ளனர்.