டெல்லி பலாத்கார சம்பவம்... 'உபேர்'டாக்ஸி நிறுவனம் தான் பொறுப்பு: மக்கள் கருத்து!!
டெல்லி: டெல்லியை உலுக்கிய பலாத்கார சம்பவத்துக்கு கவனக் குறைவாக இருந்த உபேர் கால் டாக்சி நிறுவனமே பொறுப்பு என்று இன்ஸ்டாவானி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி நிறுவன ஓட்டுநரால் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஏற்கெனவே பலாத்கார வழக்கில் சிறையில் இருந்தவர். அவரைப் பற்றி விசாரிக்காமல் பணிக்கு சேர்த்த உபேர் கால்டாக்சி நிறுவனம் மீது கோபம் திரும்பியது. இதனால் உபேர் கால் டாக்சி நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று உபேர் நிறுவனம் கூறி வருகிறது.
உபேரே பொறுப்பு
இந்த நிலையில் இன்ஸ்டாவானி நிறுவனமானது நாடு முழுவதும் 1118 பேரிடம் டெல்லி பலாத்கார சம்பவம் குறித்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் 76% பேர் கவனக்குறைவாக இருந்ததற்கு உபேர் கால் டாக்சி நிறுவனமே பொறுப்பு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்கள் சீற்றம்
சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா நகரங்களில் 70%க்கும் அதிகமானோர் உபேர் நிறுவனத்தின் மீதுதான் குற்றம்சாட்டுகின்றனர். பெண்களில் 81% பேர் உபேர் நிறுவனம் மீது குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
உபேர் டாக்சியில் போவீங்களா?
உபேர் கால் டாக்சி நிறுவனம் வசதியாகத்தான் இருக்கிறது என 40.62% பேரும் அதை பயன்படுத்த மாட்டோம் என்று 59.38% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உபேருக்கு தடை சரியா?
உபேர் கால் டாக்சி நிறுவனத்துக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டது சரி என்று 48.08%; ஏற்க முடியாது என்று 51.92% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.