உதய்ப்பூர் டெய்லர் படுகொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும்.. ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 3 நாள் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், உதய்ப்பூர் டெய்லர் கண்ணையா லால் கொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் ஆலோசனை கூட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் கூட்டம் துவங்கியது. இந்தி கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
4 நாட்களில் தூக்கில் போடனும்.. கோபத்தை அடக்க முடியல! உதய்பூர் கொலை குறித்து ராஜஸ்தான் அமைச்சர்
ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்பு
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்போல், நிர்வாகிகள் கிருஷ்ண கோபால், மன்மோகன் வைத்யா, கிரிஷன் கோபால், சி ஆர் முகுந்த், அருண் குமார், ராம் தத் உள்பட பலர் பங்கேற்று பேசினர். இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு
2025ல் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் பற்றியும், இதனை காஷ்மீரில் கொண்டாடுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜஸ்தானில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பாகவும் சில விஷயங்களை ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.
டெய்லர் கொலைக்கு கண்டனம்
மேலும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த மாத இறுதியில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக டெய்லரான கண்ணையாலால் வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அவரை 2 பேர் கொன்று வீடியோ வெளியிட்டதோடு, பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர். இதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக முறையில் எதிர்ப்பு
இதுகுறித்த கேள்விக்கு ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், ‛‛இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவரும் தங்களின் குறைகைளை ஜனநாயக வழியில் கூற அரசியலமைப்பு சட்டத்தின் படி உரிமை உள்ளது. ஒருவருக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அதனை ஜனநாயக முறையில் எதிர்க்க வேண்டும். அதோடு கருத்து சுதந்திரம் என பேசும்போது பொது உணர்வையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்'' என கூறினார்.
முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்
மேலும் கண்ணையாலால் படுகொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், ‛‛இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் இந்து அமைப்புகள் ஜனநாயக ரீதியில் எதிர்வினையாற்றுகிறது. முஸ்லிம் சமூகமும் இதுபோன்ற செயலை கண்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இன்டலெக்சுவல் இதனை கண்டித்தனர். ஆனால் முஸ்லிம் சமூகமும் இதற்கு எதிராக பேச முன்வர வேண்டும். தற்போது நடந்த சம்பவம் என்பது தேசம் அல்லது சமுதாயத்தின் நலனுக்காக நடந்தது இல்லை. இதனால் அனைவரும் கண்டிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.