ஏழைகளின் நலனுக்காகத்தான் பண ஒழிப்பு நடவடிக்கை - மத்திய அரசு
டெல்லி: ஏழைகளின் நலனுக்காகத்தான் பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக பல்வேறு மனுக்கள், வெவ்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அனைத்து மனுக்களையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டது. இந்த விவகாரத்தின் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு, தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. உயர் நீதிமன்றங்கள் வாயிலாக மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதால் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள்தான் 85 சதவீதம் இருந்தன. இந்த நோட்டுகளில்தான் அதிக அளவில் கள்ள நோட்டுகளும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு கள்ள நோட்டுகள் மூலமே நிதியும் கிடைக்கப்பெற்று வந்தன.
மேலும், நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக விளங்கிய கருப்புப் பணம் பெரும்பாலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகவே இருந்தன. இந்த கருப்புப் பணத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தது ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும்தான்.
இதன் காரணமாகவே, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக்குவது என முடிவு செய்யப்பட்டது.
கருப்புப் பணத்தை ஒழித்து, அதன் மூலம் ஏழைகள் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.
கருப்புப் பணப் பதுக்கல்காரர்கள் விழித்துக் கொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை ரகசியமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முடுக்கிவிட்டால் இந்த விஷயம் வெளியில் கசிந்துவிடும்.
அவ்வாறு நடந்தால், அரசின் நோக்கமே சிதைந்துபோகும். இதனைக் கருத்தில்கொண்டே இந்த அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டது.
இந்த நடவடிக்கையால் மக்களுக்கு குறுகிய காலத்துக்கு சிரமம் இருக்கும் என்பதை மறுக்கவில்லை. அதேநேரத்தில், இதன் மூலம் நீண்டகால பலன் மக்களுக்கு கிடைக்கும். கருப்புப் பணத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயனடைவார்கள்; வரி ஏய்ப்பு முற்றிலும் தவிர்க்கப்படும்.
மேலும், இந்த நடவடிக்கையால் மனை வணிகத் துறையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கருப்புப் பணம் வெளிவரும். இதனால், எதிர்காலத்தில் வீட்டு மனைகளின் விலை கணிசமாகக் குறையும். இதனால் அனைவரும் சொந்த வீடு வாங்கலாம் என்ற நிலை ஏற்படும்.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.