பதன்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐக்கிய ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்பு
டெல்லி: பதன்கோட் விமான படைத் தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு- காஷ்மீரை மையமாக கொண்டு இயங்கும் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பதன்கோட் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு காஷ்மீரை மையமாக கொண்டு இயங்கும் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ஐக்கிய ஜிகாத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சையது சதாகட் ஹூசைன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், எந்த பாதுகாப்பு ஸ்தாபனமும், காவற்படையும் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது என்ற முக்கிய செய்தியை காஷ்மீர் முஜாகிதீன்களின் இந்த தாக்குதல் இந்தியாவுக்கு வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தானை குற்றம்சாட்டுவதற்கு பதிலாக, காலம் தாழ்த்தாமல் காஷ்மீர் மக்களுக்கு அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பானது முத்தாஹிதா ஜிகாத் கவுன்சில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவிரவாத ஜிகாத் அமைப்பானது 1994-ல் உருவாக்கப்பட்டது. ஹிஜ்புல்-முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான சையது சலாஹூதின் தான் ஐக்கிய ஜிகாத் கவுன்சிலுக்கும் தற்போது தலைவராக உள்ளார். இந்திய எல்லைக்குட்ப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியை மையமாக கொண்டு இயங்கி வருகிறது.