சபரிமலை, மாளிகைப்புரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகளாக உன்னிகிருஷ்ணன், மனுகுமார் தேர்வு
கொல்லம்: சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கு புதிய மேல்சாந்திகளாக உன்னிகிருஷ்ணன் மற்றும் மனுகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனார்.
ஆண்டுத்தோறும் புதியதாக மேல் சாந்திகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பதவிக்காலம் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து அடுத்து வரும் கார்த்திகைக்கு முன்பு வரை இருக்கும். இந்த காலத்துக்கான புதிய மேல்சாந்திகள்தான் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கேரள ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, தேவசம் நிர்வாகிகள் மற்றும் சபரிமலை தந்திரிகள் அடங்கிய குழுவினர் நேர்முகத் தேர்வு நடத்தி ஒரு பட்டியல் தயாரிக்கின்றனர். பின்னர், ஐப்பசி ஒன்றாம் தேதி சபரிமலையில் இந்த பட்டியலில் இருந்து ஒருவர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இவர் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்ய வேண்டும்.
சிறப்புக் குழு முன்னிலையில் குலுக்கல்
அதன்படி, மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நேற்று சபரிமலையில் நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன், உறுப்பினர் அஜய்தரயில், ஐகோர்ட் நியமித்துள்ள சிறப்பு ஆணையர் மனோஜ், தேவசம் செயலர் ஜெயக்குமார் ஆகியோரின் முன்னிலையில் இந்தக் குலுக்கல் தேர்வு நடைபெற்றது.
சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் தேர்வு
முன்னதாக, தந்திரி கண்டரரு ராஜீவரரு துண்டு சீட்டுகள் அடங்கிய பாத்திரத்திற்கு பூஜைகள் நடத்தி கொடுத்தார். பின்னர் பந்தளம் அரண்மனை குடும்பத்தை சேர்ந்த சிறுவன் நவநீத வர்மா பெயர்கள் எழுதியிருந்த துண்டுச் சீட்டுகளை எடுத்தார். முதலில் எடுக்கப்பட்ட துண்டு சீட்டில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி பெயர் வந்ததையடுத்து, அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மாளிகைபுரம் மேல்சாந்திக்காக குலுக்கல்
இதனைத் தொடர்ந்து, சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி பெயர் மாளிகைப்புரம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர், மாளிகைபுரம் கோயிலுக்கான மேல்சாந்தியைத் தேர்ந்தெடுக்க 10 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தப் பெயர்கள் எழுத்தப்பட்ட துண்டுச் சீட்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குலுக்கல் தேர்தல் நடைபெற்றது.
மனுகுமார் மேல்சாந்தியாக தேர்வு
இந்த குலுக்கல் சீட்டுக்களை பந்தளம் அரண்மனையை சேர்ந்த சிறுமி லாவண்ய ராஜா எடுத்தார். முதல் துண்டுச் சீட்டில் கோட்டயம் மாவட்டம் சங்ஙனாசேரியை சேர்ந்த மனுகுமார் பெயர் வந்ததையடுத்து, அவர் மாளிகைபுரம் கோவிலுக்கான மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.
சிறப்பு வழிபாடு
இதனையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சாந்திகள் கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர்.