சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த அகிலேஷ்-முலாயம்.. சமாஜ்வாதி தோல்வியின் பின்னணி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி 2 ஆக உடைந்து தேர்தலை சந்தித்ததும் அக்கட்சியின் பின்னடைவுக்கு முக்கிய காரணம்.
உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக முலாயம் சிங் யாதவும், மாநில தலைவராக அவரது தம்பி சிவபால் சிங்கும் இருந்தனர். முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். முலாயமுக்கு நெருக்கமாக சிவபால் சிங்கும், அகிலேஷுக்கு நெருக்கமாக அவரது இன்னொரு சித்தப்பா ராம்கோபால் யாதவும் இருந்து வந்தனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அகிலேஷுக்கும், சிவபால் சிங்கிற்கும் இடையே மோதல் நிலவி வந்தது. கடைசியில், சிவபால் சிங் தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலை முலாயம் வெளியிட்டார். அகிலேஷ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். இதனால், அகிலேஷ் தனியாக ஒரு பட்டியலை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, முலாயமுக்கும், அகிலேஷுக்கும் இடையே லாலு, ஆசம்கான் ஆகியோர் சமரசம் பேசினர். ஆனால், இந்த சமரசம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை.
அகிலேஷ் யாதவும், ராம்கோபால் யாதவும் இணைந்து லக்னோவில் கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்டினர். இதில் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த பதவியில் அகிலேஷ் நியமிக்கப்பட்டார். மேலும், முலாயம் சிங்கை கட்சியின் புரவலராக நியமிப்பது, மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங்கையும், கட்சியில் இருந்து அமர்சிங்கையும் நீக்கம் செய்வது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
ராம்கோபால் யாதவ் கூட்டிய தேசிய செயற்குழு கூட்டம் செல்லாது என்று முலாயம்சிங் அறிவித்தார். அதே சமயம், சிவபால் சிங்கிற்கு பதிலாக, நரேஷ் உத்தமை மாநில தலைவராக அகிலேஷ் யாதவ் நியமித்தார். அகிலேஷ் தரப்பினர், தாங்களே உண்மையான சமாஜ்வாடி கட்சி என்று கூறி, கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரினர். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வளவு களேபரத்தை பார்த்தது சமாஜ்வாதி கட்சி. இதனால் மக்களிடையே இயல்பாகவே சமாஜ்வாதி ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத தன்மை வந்தது. காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொண்டதும் சமாஜ்வாதி கட்சி தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.