அதிர்ச்சி... தலித் சிறுவனை தாக்கி வற்புறுத்தி... ச்சீ இப்படியா கொடுமை செய்வாங்க.. உ.பியில் கொடூரம்
ரேபரேலி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கிய கும்பல் வாலிபர் ஒருவரின் கால்களை நக்க வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாதி, மதம் சார்ந்த பிரிவினைகள் கூடாது என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதை எடுத்து கூறி வருகின்றனர்.
இருப்பினும் சில நபர்கள் திருந்தாமல் தொடர்ந்து ஜாதி, மதத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் கூட நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இந்த வன்மம் அவ்வப்போது நடந்து வருகிறது.

சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி உள்ளது. 2 நிமிடம் 30 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் தரையில் அமர்ந்திருக்கும் சிறுவனை ஒரு கும்பல் சூழ்ந்துள்ளது. மேலும் பைக் மீது இருக்கும் நபரின் காலை நக்கும்படி சிறுவனை அந்த கும்பல் வற்புறுத்துகிறது. பயந்து போன சிறுவன் அந்த நபரின் காலை நாக்கால் நக்கும் கொடூர சம்பவத்தை வீடியோ காட்டுகிறது. மேலும் சிறுவனை தாக்கிய கும்பல், அவன் பயந்து நடுங்குவதை கண்டு சிரிக்கிறார்கள்.

விசாரணை
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டித்தும், சம்பவத்தை நிகழ்த்திய நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது.

நடந்தது எங்கே?
இந்த விசாரணையின்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சிறுவனை ஒரு கும்பல் மிரட்டி இப்படி செய்ய வைத்தது தெரியவந்தது. ஏப்ரல் மாதம் 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ரேபரேலி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

7 பேர் கைது
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனக்கு நடந்த கொடுமையை அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சிறுவனை துன்புறுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி அசோக் சிங் கூறினார்.

யார் இந்த சிறுவன்; காரணம் என்ன?
பாதிக்கப்பட்ட சிறுவன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் தாயுடன் சிறுவன் வசித்து கொண்டு பள்ளியில் படித்து வருகிறான். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய நபரின் வயல்களில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் பணி செய்தார். இதற்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன், அந்த நபர்களிடம் பணம் கேட்டார். அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, சிறுவனை தாக்கி கால்களை நக்க வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுபற்றி எப்ஐஆர்ரில் குறிப்பிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications