பெங்களூருவில் ரூ1.37 கோடி புதிய ரூபாய் நோட்டுகளுடன் டிரைவரால் கடத்தப்பட்ட வேன் கண்டுபிடிப்பு!
பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் கடத்தப்பட்ட வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக ரூ1.37 கோடி புதிய ரூபாய் நோட்டுகளுடன் சென்றபோது டிரைவரால் கடத்தப்பட்ட வேன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வேனில் இருந்து ரூ45 லட்சம் ரொக்கம் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூரு கேஜி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ஏடிஎம்-ல் பணம் நிரப்ப புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகளுடன் ஒரு வேன் நேற்று பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வேனில் மொத்தம் ரூ1.37 கோடி ரொக்கம் இருந்தது.
வேனில் போலீசார், அதிகாரிகளும் இருந்தனர். ஏடிஎம் மையம் அருகே வந்ததும் டிரைவர் வேனை நிறுத்தினார். அப்போது போலீசாரும் அதிகாரிகளும் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தனர். ஆனால் திடீரென டிரைவரோ ரூ1.37 கோடியுடன் வேனை கடத்திச் சென்றார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு நகரை விட்டு அந்த வேன் வெளியேற முடியாத அளவுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை வசந்த் நகர் பகுதியில் கடத்தப்பட்ட வேன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் வேனை சோதனையிட்டதில் புதிய ரூபாய் நோட்டுகளுடன் ரூ45 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு துப்பாக்கியை அங்கிருந்து மீட்டனர். வேனை கடத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.