ஊரடங்கை மீறியதாக இளைஞரை கன்னத்தில் அறைந்த கலெக்டர்.. பணியிலிருந்து தூக்கிய முதல்வர்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர், மருந்து கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதையடுத்து அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்று பரவல் இந்தியா முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. உயிரிழப்பு கடந்த அலையைவிட அதிகமாக உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிகையும் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகனத்தை பறிமுதல் செய்வது, அடித்து விரட்டுவது, அபாரதம் விதிப்பது, வெளியில் வர கடும் நிபந்தனைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள்.
குறையும் கொரோனா
அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கு உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 24ம் தேதி 15 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருந்தது. இப்போது ஐந்தாயிரம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது.
ஆட்சியர் ஆவேசம்
பாதிப்பு குறைந்து வந்தாலும ஊரடங்கு தொடர்ந்து கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் மருந்துக் கடைக்கு சென்றுள்ளார் அவரது வாகனத்தை போலீசார் மடக்கினர். வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டினார். அப்போது அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, திடீரென ஆவேசத்துடன் அவரது மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.
மன்னிப்பு கோரினார்
பின்னர் சாஹிலை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து காவல்துறையினரும் அவரைத் தாக்கினார்கள் இந்த காட்சியை அருகில் இருந்தவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகப் பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார். நானும், என் குடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளோம். என் தாய் இன்னமும் கோவிட்டால் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவால் சத்தீஸ்கரில் பலரது உயிர் பறிபோயுள்ளது. அந்த கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று தனது அறிக்கையில் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பதிவு
இதற்கிடையே போலீசார் வேகமாக வாகனம் ஓட்டி வந்ததாக கன்னத்தில் அறைவாங்கிய சாஹில் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ச்ம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐஏஏஸ் அதிகாரிகள் அமைப்பும் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்ததால் மாவட்ட ஆட்சித்தலைவர் ரன்பீர் சர்மாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கி சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.