மம்தா பானர்ஜி- சுவேந்து அதிகாரி மோதல்: கவனத்தை ஈர்த்த நந்திகிராமில் வாக்குப்பதிவு தொடங்கியது!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜகவின் சுவேந்து அதிகாரியும் மோதும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல்
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று 30 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது.
கவனத்தை ஈர்த்த நந்திகிராம்
மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளில் 15-ல் சிபிஎம் போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தில் கிழக்கு, மேற்கு மிட்னாப்பூரில் தலா 9 தொகுதிகள், பங்குராவில் 8 தொகுதிகள், தெற்கு 24 பர்கானாவில் 4 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது. பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கினாலும் வாக்குப்பதிவு நடைபெறும் நந்திகிராம் தொகுதி மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மமதா போட்டி
ஏனெனில் இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி களம் காண்கிறார். முன்பு மம்தாவின் வலதுகரமாக விளங்கி, தற்போது பாஜகவில் ஐக்கியமாகி எதிரியாக விளங்கி வரும் சுவேந்து அதிகாரி, மம்தாவை எதிர்த்து களம் இறங்குகிறார். ''முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுங்கள்'' என்று சுவேந்து அதிகாரி விடுத்த சவாலை ஏற்று மம்தா இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
சுவேந்து அதிகாரி சவால்
ஸ்டார் அந்தஸ்து பெற்ற நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். மம்தா பானர்ஜியும் அங்கு பிரம்மாண்ட பேரணி நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்று தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மம்தா உள்ளார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றார்.
ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்
எனவே மம்தாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். வாக்குப்பதிவு நடைபெறுவதால் நேற்று முதலே நந்திகிராம் தொகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இங்கு 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மம்தா நந்திகிராமில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிப்பாரா? இல்லை சுவேந்து அதிகாரியிடம் பணிந்து போவாரா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.