வியாபம் ஊழலில் சிக்கிய ம.பி. ஆளுநரை நீக்கக் கோரும் மனு- விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச மாநில ஆளுநர் நரேஷ் யாதவை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வு வாரியம் 2013-ம் ஆண்டு நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா உள்பட இதுவரை 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 700 பேரை போலீஸ் தேடி வருகிறது.
மத்திய பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் யாதவும் இந்த ஊழலில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் குற்றவாளி பட்டியலில் இருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது. இந்த நிலையில் அவருடைய மகன் சைலேஷ் யாதவ் கடந்த மார்ச் மாதம் லக்னோவில் உள்ள தனது தந்தையின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 47 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி செய்தி சேகரித்த செய்தியாளார் அக்சய் சிங் வாயில் நுரைதள்ளி மர்மமான முறையில் இறந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்த ஊழலில் தொடர்புடைய மருத்துவக்கல்லூரி முதல்வர் டீன் ஒருவர் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதேபோல் இன்று பயிற்சி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதால் இப்பிரச்சினை பெரும் பூதகரமாகி உள்ளது.
இதனிடையே வியாபம் ஊழலில் ஆளுநர் நரேஷ் யாதவுக்கு உள்ள தொடர்பை விசாரிக்கவும் அவரை பதவி நீக்கம் செய்யவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் வியாபம் தொடர்பான அனைத்து மனுக்களையும் வரும் 9-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து மற்றும் நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா மற்றும் அமிதாவா ராய் அடங்கிய பெஞ்ச் தெரிவித்து உள்ளது.