பெங்களூருவில் கனமழை... சுவர் இடிந்து விழுந்ததில் 5 வடமாநில தொழிலாளர்கள் பலி
பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் 5 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஒடுகிறது. பின்னமங்களா, சுல்தான் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், சொக்கனஹள்ளி என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகே மேற்கு வங்காளம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் இரும்பு தகட்டினால் தற்காலிக வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.
கனமழையில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து தொழிலாளர்கள் வீடுகள் மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் 20 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போலீசாருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிறுமி உட்பட 17 பேர் காயத்துடன் மீட்கப் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மேலும் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கனமழையால் ஹம்பி பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விளைந்திருந்த வாழை, நெல், கரும்பு விளைச்சல்கள் சேதமடைந்தன. ஹம்பி ஸ்ரீவிருபாக் ஷா கோவிலுக்கு செல்லும் பாதை முழுவதும் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.