பாலியல் புகார்: முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலியின் ராஜினாமா ஏற்பு
கொல்கத்தா: பாலியல் புகாரில் சிக்கிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலியின் ராஜினாமாவை மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் ஏற்றுக்கொண்டார்.
ஏ.கே.கங்குலி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, பாலியல் தொந்தரவு செய்ததாக அவரிடம் பணியாற்றிய பெண் வழக்கறிஞர் அண்மையில் புகார் தெரிவித்தார்.
இதுபற்றி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, பெண் வழக்கறிஞரின் புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மேற்குவங்க மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியிலிருந்து ஏ.கே.கங்குலியை நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இதற்கிடையில் மேங்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இருந்தும், ஏ.கே.கங்குலியை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அவரின் பதவியை பறிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில் மேற்கு வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை ஏகே கங்குலி திங்களன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே.நாராயணிடம் வழங்கினார். அவரின் ராஜினாமாவை ஆளுநர் இன்று ஏற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த நெருக்கடியால் மேற்குவங்கத்தில் உள்ள தேசிய சட்ட அறிவியல் பல்கலைக்கழகத்தின் கெளரவ பேராசிரியர் பதவியில் இருந்தும் ஏ.கே.கங்குலி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.