மக்களுடன் இணைந்து ஊழலை ஒழிப்போம்: முதல்வர் கேஜ்ரிவால் சூளுரை
டெல்லி: டெல்லி மக்களுடன் இணைந்து ஊழலை ஒழிப்போம் என்று பதவியேற்பு விழாவில் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சூளுரைத்துள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்குப் பின்னர் முதல்வர் கேஜ்ரிவால் மக்கள் முன்பு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்ததற்காக டெல்லி மக்களுக்கும், கடவுளுக்கும் நன்றி. ஈஸ்வர், அல்லா, யேசு என எல்லா இறைவன்களும் நம்முடன் இருக்கின்றனர். நம்முடைய வெற்றிக்காக இறைவனின் ஆசிர்வாதம் கிடைத்திருக்கிறது.
நம்மால் தேர்தலில் நேர்மையாக போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளோம். மக்களின் கோபத்தினாலேயே உண்மையான ஜனநாயகம் மலர்ந்துள்ளது.
மக்கள் சேவை
மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் நான் அமைச்சராக பதவியேற்றேன். டெல்லியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
கர்வம் கூடாது
அரசியல்வாதிகளின் கர்வத்தை உடைக்கத்தான் வந்திருக்கிறோம். நமக்கு கர்வம் ஏறிவிடக்கூடாது. மக்களின் ஒத்துழைப்புடன் அடிமட்டத்தில்இருந்து ஊழல் களையப்படும். டெல்லியின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் மக்களுடன் இணைந்து ஊழலை ஒழிப்போம்.
மக்களுக்கான அரசு
அதிகாரிகளைக் கொண்டு அரசு இயங்காது மக்களைக் கொண்டே அரசு இயங்கும். வேறுபாடு மறந்து மக்களுக்கு சேவை செய்ய அனைத்து கட்சியினரும் முன்வரவேண்டும்.
மக்களின் நம்பிக்கை
நேர்மையாக நடந்து கொண்டால் வெற்றி கிடைக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. டெல்லிமக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்றத் தேர்தலில்மக்கள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பார்கள் என்றார்.
உணர்ச்சிபூர்வமான பேச்சு
முதல்வராக பதவியேற்ற உடன் மக்கள் முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் பேசியது உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருந்தது. அவரது பேச்சின் போது மக்கள் தங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் பேச்சின் இடை இடையே சிறிதளவு தடங்களும் ஏற்பட்டது. இறுதியாக ஆம் ஆத்மியின் கொள்கை விளக்கப் பாடலைப் பாடி உரையை நிறைவு செய்தார் கேஜ்ரிவால்.