சட்டத்தை கையில் எடுக்க கூடாது.. உதய்பூர் படுகொலைக்கு அசாதுதீன் ஓவைசி கண்டனம்!
உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவை ஆதரித்தவர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த மே 27ம் தேதி தொலைக்காட்சி விவாதத்தின்போது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்தவர் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உதய்பூரில் தையல் கடை நடத்திவரும் கண்ணையா லால். இவர் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மாவின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நூபுர் ஷர்மாவை முகப்புப் படமாகவும் வைத்துள்ளார். அதேபோல் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பதிவில் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கண்ணையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர், அவரிடம் துணிக்கு அளவு கொடுப்பது போல் நடித்து கொலை செய்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் உதய்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, 600 காவலர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் உதய்பூர் பகுதியில் இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலை சம்பவத்திற்கு காரணமான இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கெளஸ் முகமது, ரியாஸ் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த படுகொலையை நான் கண்டிக்கிறேன். எந்த வகையிலும் இதை நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற வன்முறையை எதிர்ப்பது கட்சியின் தொடர்ச்சியான நிலைப்பாடு. சட்டத்தை யாரும் கையிலெடுக்கக் கூடாது. மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். அதேபோல் நுபுர் ஷர்மாவும் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.