கோடிக்கணக்கில் ஆதார் விவரத்தை கொள்ளையடித்த வாட்ஸ் ஆப் குரூப்.. செயல்பட்டது எப்படி?
500 ரூபாய் கொடுத்தால் 10 நிமிடத்தில் ஆதார் விவரம் அளிக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்று மிகவும் திறமையாக செயல்பட்டு இருக்கிறது.
ஜலந்தர்: இந்தியர்கள் 90 சதவிகிதமானவர்களிடம் தற்போது ஆதார் அட்டை இருக்கிறது. நம்முடைய தொலைபேசி எண் தொடங்கி கண் ரெட்டினா வரை எல்லாமே இந்த ஆதார் குழுமத்திடம் பதிவாகி இருக்கிறது.
இந்த ஆதார் விவரங்களை ஆதார் நிறுவனம் தவிர யாரும் பயன்படுத்த முடியாது என்றுதான் இவ்வளவு காலம் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் 100 பேர் கூட இல்லாத வாட்ஸ் ஆப் குழு ஒன்று அதை பொய் என்று நிரூபித்து இருக்கிறது.
கோடிக்கணக்கான ஆதார் விவரங்களை போகிற போக்கில் இந்த குழு திருடி இருக்கிறது. மத்திய அரசும் ஆதார் அமைப்பும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறது.
மாற்றியது
ஆதார் அட்டை விநியோகம் தொடங்கிய போது வேகமாக வேலை முடியவேண்டும் என்பதற்காக நகரம் கிராமம் என நிறைய இடங்களில் பதிவு செய்யும் அமைப்புகள் உருவாக்கப்பட்டது. தனியார் அமைப்புகளும் இந்த பதிவு செய்யும் பணியில் பயன்படுத்தப்பட்டது. இது பெரிய பிரச்சனையை உருவாக்கிய பின் தனியார் அமைப்புகள் விலக்கிக் கொல்லப்பட்டன. தற்போது அரசு, கார்ப்பரேஷன் போன்ற இடங்களில் மட்டுமே இந்த பதிவுகள் நடக்கிறது.
வாட்ஸ் ஆப்
அணில் குமார் என்பவர் இதேபோல் ஆதார் பதிவு செய்யும் குழுவில் வேலை பார்த்து இருக்கிறார். தனியார் அமைப்புகள் நீக்கப்பட்ட பின் இவர் புதிய வேலையை தொடங்கி இருக்கிறார். ஆதார் இணையத்தில் எப்படி நுழைவது, அதில் இருக்கும் குறைபாடுகள் என எல்லாம் தெரிந்த இவர் வாட்ஸ் ஆப் குழு ஆரம்பித்து ஆதார் விவரங்களை பணத்திற்கு வெளியிட தொடங்கி இருக்கிறார்.
ஆப்ரேஷன்
'தி டிரிபியூன்' என்று ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அணில் குமார் இந்த பத்திரிக்கையை சேர்ந்த பெண் ஒருவரிடம் 500 ரூபாய் வாங்கிவிட்டு ஆதார் விவரத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஆதார் தளத்தை இயக்க கூடிய யுசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து இருக்கிறார். அதை வைத்து அந்த பெண் ஆதார் தளத்திற்கு சென்ற போது இந்தியாவில் இருக்கும் அனைத்து நபர்களின் விவரமும் அதில் வந்து இருக்கிறது.
இன்னும் நிறைய பேர்
இதேபோல் இயங்கும் நிறைய தனியார் அமைப்புகள் இந்தியா முழுக்க செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ் ஆப்பில் செயல்படுவது, பேடிஎம் மூலம் பணம் பெறுவது என இவர்கள் இயங்குவதால் தற்போது வரை இதில் எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.