பல முக்கிய வழக்குகளை கையாண்ட அனுபவசாலி தீபக் மிஸ்ரா!
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேனனின் தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவும் இருந்தார்.
டெல்லி: மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேனன், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தீபக் மிஸ்ராவின் பங்கு முக்கியமானது.
உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் 2-ஆம் தேதி முடிவடையும்.
1977-இல் வழக்கறிஞர்
கடந்த 1953ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் 3-ஆம் தேதி பிறந்தார். அவர் கடந்த 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துக் கொண்டார். அரசியலமைப்பு, சிவில், குற்றவியல், வருவாய், சேவை மற்றும் விற்பனை வரி விவகாரங்கள் ஆகியவற்றை ஒரிசா உயர்நீதிமன்றத்தில் அனுபவமாக பெற்றுக் கொண்டார்.
நிரந்தர நீதிபதி
கடந்த 1996-ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டே மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 1997-இல் அந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார்.
2011-இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி
கடந்த 2009-இல் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்றார். பின்னர் 2010-இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். இதைத் தொடர்ந்து 2011-இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியானார்.
3-ஆவது நபராவார்
நீதிபதிகளான ரங்கநாத் மிஸ்ரா, ஜிபி பட்நாயக் ஆகியோருக்கு அடுத்து ஒரிசாவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தீபக் மிஸ்ரா 3-ஆவது நபராவார்.
யாகூப் மேனன் வழக்கு
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேனனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேனன் கருணை மனுவை மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேனனின் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அந்த 3 நீதிபதிகளில் தீபக் மிஸ்ராவும் ஒருவராவார்.