துப்பாக்கியை தூக்கினால் துப்பாக்கியால்தான் டீல் செய்யனும்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பரபர பேச்சு
கொச்சி: துப்பாக்கியை கையில் எடுக்கும் சக்திகளிடம் துப்பாக்கியால்தான் பேச வேண்டும்; அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்தார். அதற்கு முன்னர், நாகாலாந்து தீவிரவாதிகளுடன் மத்திய அரசு சார்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியவர். இந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் நாகாலாந்து ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்த போது, பயங்கரவாத குழுக்களும் மாநில அரசாங்கமும் இணைந்து செயல்படுவதாக ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி இருந்தார். இதனால் ஆளுநர் பதவி வகித்த ஆர்.என்.ரவிக்கு நாகாலாந்து மாநிலத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இதன்பின்னரே தமிழ்நாட்டுக்கு அவர் மாற்றப்பட்டார். தமிழகத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு நடவடிக்கைகள், பேச்சுகள் கடும் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன.
சனாதனமே அடையாளம்! அரசியல் காரணங்களுக்காக மதசார்பற்ற நாடாக இந்தியா மாறியது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
துப்பாக்கி டூ துப்பாக்கி
இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒப்ன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தையே நடத்தக் கூடாது. மத்திய அரசானது கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு ஆயுதக் குழுவுடனும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. சரணடையுங்கள் என்பதுதான் மத்திய அரசின் ஒற்றை கொள்கையாக இருக்கிறது.
மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதலின் போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பாகிஸ்தானிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மும்பை தாக்குதலை நாம் மறந்துவிடவும் முடியாது. மும்பை தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் இருநாடுகளும் பயங்கரவாதத்தால் பாத்க்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. அதனை நாம் எப்படி ஏற்க முடியும்?
தேவை பதிலடி
புல்வாமாவில் 46 பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக பாலக்கோட்டில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. அதுபோல, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிற எச்சரிக்கைதான் தேவை. அதைத்தான் பாலகோட்டில் நிகழ்த்திக் காட்டினோம். அப்படித்தான் ஒரு அரசாங்கம் நடந்து கொள்ளவும் வேண்டும்.
Recommended Video
நட்பு, பகை நாடு
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல், வடகிழக்கு மாநில தீவிரவாத குழுக்களின் தாக்குதல்கள், மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் என அனைத்துமே கடந்த 8 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துவிட்டது. நம்மைப் பொறுத்தவரை எது நட்பு நாடு? எது பகை நாடு? என்பதை வரையறை செய்வது அவசியம். இவ்வாறு ஆர்.என்.ரவி கூறினார்.