மத அரசியலில் பரிணாம வளர்ச்சி பெற்ற பாஜக.. சட்டென ஜாதி அரசியலில் குதிப்பு!
டெல்லி: இந்து மதத்தின் பெயரால் அம்மதத்தை சேர்ந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதை மறைமுக அஜென்டாவாக வைத்துள்ள பாஜக, ஜாதியை தூக்கி பிடித்து, தன்னையும் பிற மாநில கட்சிகளை போன்ற ஜாதி வாக்கு வங்கி கட்சியாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள முக்கிய கட்சி நிர்வாகிகளின் பெயரோடு ஜாதி பெயரையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது இதற்கு சான்று.
பாஜக கர்நாடக மாநிலத்திற்கு புதிய துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 25 பெயர்களை வெளியிட்டது.
வழக்கத்திற்கு மாறாக, இவர்களின் பெயர்களுடன், ஜாதியின் பெயரையும் குறிப்பிட்டு பிரஸ் ரிலீஸ் அனுப்பியது பாஜக. இதுகுறித்து அக்கட்சி தலைவர்களிடம் கேட்டபோது, "எப்படியும் மீடியாக்கள், ஜாதி பின்புலத்தை ஆராயத்தான் போகிறது. உங்களுக்கு ஏன் சிரமம் என்று நாங்களே குறிப்பிட்டு விட்டோம்" என்று பதில் கிடைத்தது.
நகைச்சுவையாக இந்த பதில் கூறப்பட்டபோதிலும், உள்ளுக்குள் ஜாதி வாக்கு வங்கி காய் நகர்த்தலுக்கான திட்டம் இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
கர்நாடகாவில் பலம் வாய்ந்த சமூகம் என்றால் அது லிங்காயத்துகள்தான். எண்ணிக்கையிலும் சரி, பொருளாதார கட்டமைப்பிலும் சரி, லிங்காயத்துகளுக்குதான் முதலிடம். 2வது இடம் ஒக்கலிகர்களுக்கு. கவுடர்கள் என்ற அடைமொழி கொண்டது இந்த ஜாதி.
இந்த ஜாதிகள் நடுவே எலியும் பூனையுமான பொருத்தம்தான். ஜாதியை கடக்க வேண்டிய ஆன்மீகமும்கூட, இங்கு ஜாதியின் பெயரால்தான் நடக்கிறது. லிங்காயத்துகளின் பெரிய மடம் தும்கூரிலுள்ள சித்தகங்கா மடமாகும். அதேபோல ஒக்கலிகர்களுக்கு ஆதிசுஞ்சனகிரி மடம். இதுபோல மாநிலம் முழுக்க இவ்விரு ஜாதிகளின் ஆன்மீக மடங்கள் செயல்படுகின்றன.
கர்நாடக பாஜகவை பொறுத்தளவில் லிங்காயத்துகளின் கட்சி என்ற பெயருடன் விளங்குகிறது. காரணம், அதன் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் லிங்காயத்து ஜாதியினர். இந்த முத்திரையை உடைப்பதற்கே, ஒக்கலிக ஜாதியை சேர்ந்த சதானந்தகவுடாவுக்கு கொஞ்ச காலம் முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையை மாற்றத்தான், 4 லிங்காயத்துகள் தவிர்த்து பிற ஜாதியினருக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலில் அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது எடியூரப்பா பாஜக மாநில தலைவராக இருப்பதால் லிங்காயத்துகளுக்கு அதிக வாய்ப்பு தராவிட்டால் பிரச்சினையில்லை என பாஜக நினைக்கிறது.
இதனால்தான் ஜாதியை பகிரங்கப்படுத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தலித்துகளுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலும் இதற்கு காரணம் என்கிறார்கள்.
இந்து மதத்தின் பெயரால் அம் மக்களை ஒருங்கிணைப்பதை மறைமுக அஜென்டாவாக கொண்ட பாஜக, ஜாதியின் பெயரால் அரசியல் நடத்த வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.