அன்று நமஸ்தே டிரம்ப்.. இன்று கிரிக்கெட் தொடர்.. கொரோனா பரவலுக்கும் மோடிக்கும் இப்படியொரு தொடர்பா?
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதற்கு இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே மோடி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் மோடி ஸ்டேடியம் முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது.

குஜராத் கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தலைநகரிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், குஜராத் மாநிலத்தில் காந்தி நகரைக் காட்டிலும் அகமதாபாத்திலேயே கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

காரணம் மோடி ஸ்டேடியம்
அங்குத் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல 300ஐ கடந்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. முதலில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சிலவற்றுக்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கிரிக்கெட் போட்டியைப் பார்க்கப் பலரும் மோடி ஸ்டேடியத்தில் ஒரே இடத்தில் ஒன்றுகூடியதால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

பரவல் அதிகரிப்பு
நிலைமை மோசமாவதை உணர்ந்த பிசிசிஐ, மீதமுள்ள போட்டிகளுக்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், இது தாமதமான அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. போட்டியைப் பார்க்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அகமதாபாத்திற்கு மக்கள் ஒன்றுகூடியதால் அங்கு கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

நமஸ்தே டிரம்ப்
அதேபோல கடந்த ஆண்டு தொடக்கத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருந்தார். அவர் பங்கேற்ற நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சி இதே மோடி மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்றதாகக் கூறப்பட்டது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும், அகமதாபாத் நகரில் கொரோனா பரவல் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

பெரும் சிக்கல்
அன்றும் சரி, இன்றும் சரி பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததாலேயே வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியின் போதுகூட, அதுதான் கொரோனா பரவலின் தொடக்கக் காலம். அப்போது வைரஸ் பரவல் இவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த ஓர் ஆண்டாகப் பாதிப்புகளை உணர்ந்த பின்னரும் கிரிக்கெட் போட்டிக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications