தேச நலனுக்காகவே அமெரிக்க தீர்மானம் புறக்கணிப்பு.: வெளியுறவுத் துறை செயலர்
டெல்லி: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா நாட்டு நலன் காரணமாகவே புறக்கணித்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான், சீனா உட்பட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. இருப்பினும் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது கடும் கண்டனத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் இந்தியா புறக்கணித்தது? என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் டெல்லியில் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங், தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் தேதி பற்றி ஆலோசித்து வருகிறோம். கச்சத்தீவு இந்தியாவின் பகுதியல்ல; அது இலங்கைக்கு சொந்தமானது என்றார்.