திரிபுராவில் ஜெயித்த கையோடு லெனின் சிலையை அகற்றிய பாஜக
Recommended Video
அகர்தலா: சட்டசபை தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர்.
திரிபுரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது பாஜக. தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் பாஜகவினர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த சிலையை அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று பாஜகவினர் கோஷமிட்டனர்.
சிலையை அகற்றியதை பார்த்து இடதுசாரிகள் கோபம் அடைந்தனர். பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலையை நாங்கள் அகற்றவில்லை இடதுசாரிகளால் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் அகற்றினர் என்று பாஜக தெரிவித்துள்ளது.
லெனின் சிலையை அகற்றி அதன் தலையை துண்டித்து பந்து போன்று பயன்படுத்தி பாஜகவினர் கால்பந்தாட்டம் விளையாடினார்கள் என்று சிபிஎம் நிர்வாகி தபஸ் தத்தா தெரிவித்துள்ளார்.
ஜேசிபி இயந்திரத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலை திரிபுராவில் இடதுசாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும்விதமாக கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது.