எனக்கு எப்படியாவது உதவுங்கள்.. பிரதமருக்கு பெங்களூரை சேர்ந்த பெண் கடிதம்
பெங்களூரை சேர்ந்த அத்யா ஸத்பாதி என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த 'அத்யா ஸத்பாதி' என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வு வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த அத்யா ஸத்பாதி முதல் வகை சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவர்களுக்கு அடிக்கடி பசிக்கும் என்பதால் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டி இருக்கும். ஆனால் இவர் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதை பார்த்த இவரது நண்பர்கள் இவரை கிண்டல் செய்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த கேலிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் அத்யா ஸத்பாதி புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். அதன்படி தனது கஷ்டங்களை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் ''என்னை என் கஷ்டத்தில் இருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள். என்னுடைய குறைபாடை எல்லோரும் கேலி செய்கிறார்கள். இதில் இருந்து வெளியே வர ஒரு வழிதான் இருக்கிறது. மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வதற்கு எதிராக அரசு உருவாக்கி இருக்கும் சட்டத்தில் சர்க்கரை வியாதியையும் சேர்த்து விடுங்கள்'' என்று கேட்டு இருக்கிறார்.
இந்த சட்டத்தின் படி குறிப்பிட்ட சில நோய் உள்ளவர்களை கிண்டல் செய்தால் இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும். மேலும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சென்ற ஆண்டு இறுதியில் வந்த இந்த சட்டம் அடுத்த மாதம் மீண்டும் மறுஆய்வு செய்யப்பட இருக்கிறது.
இந்த சட்டத்தில் இதுவரை சர்க்கரை வியாதி இல்லை பட்டியலில் இல்லை. இதன் மறு ஆய்வில் சேர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.