இந்த கூத்தை கேட்டீங்களா?: வேலைபார்க்கும் பெண்களே வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணமாம்
ராய்பூர்: பெண்கள் வேலைக்கு செல்வதால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு வெளியிட்டுள்ள 10ம் வகுப்பு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் அரசின் உயர்நிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள 10ம் வகுப்பு புத்தகத்தில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க முக்கிய காரணம் என்ன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிக அளவில் வேலை செய்யத் துவங்கியது தான் சுதந்திரத்திற்கு பிறகு நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்த ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் இது குறித்து மாநில பெண்கள் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பற்றி மாநில முதல்வர் ராமன் சிங்கிடம் தெரிவிக்கப்படும் என்று அந்த ஆணையம் வாக்குறுதி அளித்துள்ளது.
பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆண்கள்-பெண்கள் சரிசமம் என்று மேடைதோறும் பிரதமர் மோடி முழங்கி வரும் நிலையில் சத்தீஸ்கர் மாநில புத்தகத்தில் பெண்களைப் பற்றி இப்படி ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.