சுக்மா, மல்காங்கிரி, கோராபுட்- பாதுகாப்பு படையினரை தொடர்ந்து பலிகொள்ளும் சிவப்பு 'சித்தாந்தம்'
பாதுகாப்பு படையினர் மீதான மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் தொடருகின்றன.
புவனேஸ்வர்/ராய்ப்பூர்/மும்பை: தேசத்தின் ஆன்மாக்களான பாதுகாப்பு படையினரை தொடர்ந்து மாவோயிஸ்டுகள் படுகொலை செய்து வருகின்றனர். ஒடிஷாவின் மல்காங்கிரி, கோராபுட், சத்தீஸ்கரின் சுக்மா, மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி பகுதிகளில்தான் பாதுகாப்பு படையினருக்கு எதிராக மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பீகார், ஜார்க்கண்ட், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலுங்கானா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் என 10 மாநிலங்களில் 106 மாவட்டங்களை தங்களது பிடியில் வைத்திருந்தனர் மாவோயிஸ்டுகள். நாட்டின் மொத்தம் உள்ள 683 மாவட்டங்களில் 106 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகள் வசம் இருந்தன. இதில் 44 மாவட்டங்கள் அசைக்க முடியாத மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதிவரை பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான மோதல் எண்ணிக்கை 851. இது கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் சற்று குறைவு. 2016-ம் ஆண்டில் 1048 மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2009-ம் ஆண்டுதான் மிக அதிக அளவில் 2258 மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் சத்தீஸ்கரில்தான் அதிக அளவாக 353 சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த 10 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய முக்கிய தாக்குதல்கள்:
2008 ஜூன் 29: ஒடிஷா-ஆந்திரா (இன்றைய தெலுங்கானா) எல்லைப் பகுதியான சித்தரகோண்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 35 வீரர்கள் உயிரிழந்தனர்.
2009 ஜூலை 13: சத்தீஸ்கரின் ராஜ்ந்தகோன் தாக்குதலில் போலீஸ் அதிகாரி உட்பட 30 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
2010 பிப்ரவரி 15: மேற்குவங்கத்தின் சில்டா தாக்குதலில் 20 பாதுகாப்பு வீரர்கள் பலியாகினர்.
2010 ஏப்ரல் 6: சத்தீஸ்கரின் சுக்மாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
2010 ஜூன் 29: சத்தீஸ்கரின் நாராயண்பூர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
2013 மே 25: சத்தீஸ்கரின் தர்பா பள்ளத்தாக்கில் சல்வா ஜுடூம் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கிய மகேந்திர கர்மா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வி.சி.சுக்லா, உதய் முதலியார், நந்த்குமார் படேல் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
2014 மார்ச் 11: சத்தீஸ்கரின் சுக்மாவில் 15 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
2014 மே 11: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி தாக்குதலில் 7 போலீசார் உயிரிழந்தனர்.
2015 ஏப்ரல் 10-13: சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதியில் 7 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.
2015 ஆகஸ்ட் 26: ஒடிஷாவின் மல்காங்கிரியில் 3 எல்லை பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
2016 ஜூலை 19: பீகாரின் அவுரங்காபாத்தில் 10 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.
2017 பிப்ரவரி 2: ஒடிஷாவின் கோரபுட்டில் 7 போலீசார் கொல்லப்பட்டனர்.
2017 மார்ச் 11: சத்தீஸ்காரின் சுக்மாவில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
2017 ஏப்ரல் 24: சத்தீஸ்கரின் சுக்மாவில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.