உணவு மானியம், பொதுவிநியோக திட்டத்துக்கு வேட்டு வைக்க போராடும் 'உலக வர்த்தக அமைப்பு'
டெல்லி: உணவு மானியம் மற்றும் பொதுவிநியோக திட்டத்துக்கு வேட்டு வைக்கும் வகையிலான உலக வர்த்தக அமைப்பின் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்திருப்பதன் மூலம் வளர்ந்த நாடுகள் இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன.
உலக வர்த்தக அமைப்பு (WTO) என்பது 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்ட காலம் முதல் வளர்ந்த நாடுகள் தங்களது மேலாதிக்கத்தை வளரும் நாடுகளின் மீது திணித்தே வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு மானியமே வழங்கக் கூடாது என்று வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நெருக்கடி கொடுத்தே வருகின்றன.
2001 ஆம் ஆண்டு கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாளைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன், வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு மானியங்களை அள்ளித் தருவதை நிறுத்தும் வரை, விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பின் வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது என்று குரல் கொடுத்தார்.
ஆனாலும் உலக வர்த்தக அமைப்பு பகீரபிரயத்தனம் செய்து கொண்டே இருக்கிறது. இதன் உச்சமாகத்தான் கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், 'வளரும், ஏழை நாடுகளில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% மேல் இருக்கக் கூடாது' என்ற வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை அப்போதைய மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியது. ஆனால் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதிகள் இப்படியான ஒரு ஒப்பந்தத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அதிரடியாக அறிவிக்க வளர்ந்த நாடுகளோ வாயடைத்துப் போயிருக்கின்றன.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் சொல்வது என்ன?
- ஒவ்வொரு நாடும் உணவு மானியத்திற்காக செலவிடும் தொகை 1986-88 ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியின் மதிப்பில் 10%க்கும் மேல் இருக்கக் கூடாது.
- வரும் 2017 ஆம் ஆண்டிற்குள் உணவு மானியம் என்பது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தை ஏற்றால் என்ன நடக்கும்?
- இந்தியாவைப் பொறுத்தவரையில் 66% மக்களுக்கு உணவு மானியம் வழங்கப்படுகிறது. இது கைவிடப்பட வேண்டிய நிலை வரும்.
- நடைமுறையில் உள்ள பொதுவிநியோகத் திட்டம் மற்றும் அதற்காக விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை கொள்முதல் செய்வது ஆகியவற்றை கைவிட நேரிடும்.
- முந்தைய மத்திய அரசு நிறைவேற்றிய உணவு பாதுகாப்பு சட்டமும் கைவிடப்பட வேண்டும். இதனால்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அளவு உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
- இதை ஏற்க மறுத்தது உலக வர்த்த அமைப்பு. இதனால்தான் மத்திய அரசு உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
- இந்தியா தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பின்பற்றி ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடாமல் செய்துவிட்டது.
உலக வர்த்தக அமைப்பு சொல்வது என்ன?
- வளர்ந்த பணக்கார நாடுகள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதால் இந்தியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கோபத்தில் இருக்கின்றன.
- ஒட்டுமொத்தமாக உலக வர்த்தக அமைப்பின் எதிர்காலத்தையே இந்தியா கேள்விக்குறியாக்கிவிட்டதாக குமுறுகின்றன இந்த நாடுகள்.
- இதுகுறித்து உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் ராபர்ட்டோ அஸ்வேடோ கூறுகையில், வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக கெடு விதிக்கப்பட்டிருந்த ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகும், இந்த விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. இந்தப் பின்னடைவு உலக வர்த்தக அமைப்பை அமைப்பை நிச்சயத்தன்மையற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது என்றார்.
- மேலும் இந்தோனேசியாவின் பாலித் தீவு மாநாட்டின்போது அளித்த வாக்குறுதியை மீறி இந்தியாவும், ஒரு சில நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றும் அஸ்வேடோ கூறியுள்ளார்.
மத்திய அரசு சொல்வது என்ன?
- உலக வர்த்தக அமைப்பு விவகாரம் குறித்து டெல்லியில் கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விவசாயிகள் நலனே முக்கியம். உலக வர்த்தக அமைப்புடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் நலனை சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றார்.
- மேலும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை நாம் எடுக்கவிருக்கிறோம். முந்தைய அரசின் கொள்கைகளை நாம் பின்பற்றினால் நமது சிறு விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படும். நம்மை பொறுத்தவரை விவசாயிகள் நலனே முக்கியம். அரசுக்கு நிறைய நெருக்கடி இருந்தபோதும், உலக வர்த்தக அமைப்பின் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்போம். ஆனால் ஏழை விவசாயிகளின் நலன்களை சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.