எடியூரப்பா மீதான 15 நில மோசடி வழக்குகளையும் தள்ளுபடி செய்த கர்நாடகா ஹைகோர்ட்
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 15 வழக்குகளை அந்த மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது எடியூரப்பாவிற்கு நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூர் அருகே உள்ள அரகெரே, தேவசிக்கன ஹள்ளி ஆகிய இடங்களில் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்திய 12 ஏக்கர் நிலத்தை விடுவித்து அதன் உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சமூக ஆர்வலர் ஜெயக்குமார் ஹிரேமத், லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக எடியூரப்பா மீது தனித்தனியாக 15 முதல் தகவல் அறிக்கைகளை லோக் ஆயுக்தா பதிவு செய்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நில விடுப்பில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எடியூரப்பா மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
15 வழக்குகள் தள்ளுபடி
இதை எதிர்த்து, எடியூரப்பா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரத்னகலா, லோக் ஆயுக்த தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு முன்னாள் முதல்வர் எடியூரப்பா தரப்புக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
அடுத்தடுத்த உற்சாகம்
கர்நாடகாவில் இரும்பு தாதுக்களை பிரித்தெடுக்கும் சுரங்கம் நடத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சலுகை வழங்கியதாகவும், இதன் மூலம் எடியூரப்பாவின் மகன்களுக்கு பண ஆதாயம் கிடைத்ததாகவும், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் நீதிமன்றமான லோக் ஆயுக்தா, அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில், காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
பறிபோன முதல்வர் பதவி
இதனையடுத்து, பாரதிய ஜனதா மேலிடத்தின் கட்டளைப்படி, அப்போதைய முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கப்படாமல், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் இயற்கை நீதி பின்பற்றப்படவில்லை என்றும் எடியூரப்பா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், லோக்ஆயுக்தா அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே போல தற்போது எடியூரப்பாவிற்கு எதிராக போடப்பட்ட 15 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் புதிய உற்சாகத்தில் இருக்கிறார் எடியூரப்பா.