நெட்டிசன்ஸ் எல்லோரும் போர் வீரர்கள் தான்... நாட்டைக் காக்க மத்திய அரசு வேண்டுகோள்!
சமூக வலைத்தளங்களில் இயங்கும் எல்லோருமே ராணுவ வீரர்களைப் போன்றவர்கள்.அதனால் அவர்கள் நாட்டைக்காக்கும் வகையில் கருத்துக்களை பதிவிடவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி:சமூக வலைத்தளவாசிகளுக்கு மத்திய அரசு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில்,சமூக வலைத்தளங்களில் இயங்கும் அனைவருமே இந்திய ராணுவ வீரர்களைப் போன்றவர்கள்தான்.எனவே அவர்கள் எதிரிகளால் பதிவேற்றம் செய்யப்படும் கருத்துக்களைப் பரப்பாமல்,நாட்டின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் செயல்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் கூறுகையில்,
" நீங்கள் இந்த நாட்டின் படைவீரனாக இருப்பதற்கு ராணுவச் சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை. தற்போது எல்லைப்பகுதிக்கும் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில், எதிரி உங்கள் வீட்டிலேயே சமூக வலைதளங்கள் மூலம் தாக்குதலை நடத்த முடியும்.எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எதிரிகளால் அவ்வாறு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் நம் நாட்டுக்கு எதிரான அவதூறான கருத்துகளையோ, உங்களுக்குத் தெரியாத விஷயங்களையோ நீங்கள் பரப்பக் கூடாது. இத்தகைய தகவல்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் நீங்கள் உண்மையான படைவீரனாக விளங்க முடியும்" என்று தெரிவித்தார்.