”உலகின் வயதான பெண்மணி” புகழுக்காக காத்திருக்கும் 116 வயது பாட்டி
லிமா: உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழ்க் கிரீடம் விரைவில் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் பெரு நாட்டின் 116 வயது பெண்மணி ஒருவர்.
ஊடகங்களின் ஒளிமழை தன் மீது பாயப்போகும் அந்த பொன்னான நன்நாளுக்காக பெரு நாட்டை சேர்ந்த 116 வயதாகும் மூதாட்டியான ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனையாளரான ஜப்பான் நாட்டின் மிசாவொ வொக்காவா வை விட வெறும் 3 மாதங்கள் மட்டுமே இளையவரான இவர், 20-12-1897 பிறந்துள்ளார்.
இரண்டு நூற்றாண்டு கண்டவர்:
"நான் போன நூற்றாண்டை சேர்ந்தவள் இல்லையப்பா... அதுக்கு முந்தைய நூற்றாண்டுக்காரி" என்று பெருமிதம் பொங்க கூறுகிறார் இவர்.
ஆரோக்கிய ரகசியம்:
தனது ஆரோக்கியத்தின் ரகசியமாக இயற்கை உணவுகளை குறிப்பிடுகிறார். உருளைக்கிழங்கு, ஆட்டுக்கறி, செம்மறியாட்டுப் பால் போன்றவை தனக்கு விருப்பமான உணவு என்று கூறுகிறார்.
எங்கும் சென்றதில்லை:
இது வரை தனது பூர்வீக கிராமமான ஹுவான்காவெலிக்காவை விட்டு எந்த சூழ்நிலையிலும் வெளியேறியதே இல்லை என்று தெரிவித்தார்.
இளம் விதவை:
மிக இளம்வயதிலேயே விதவையாகி விட்ட ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா, தனது 9 குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும், அவர்களில் 3 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உதவும் பெரு அரசு:
ஏழ்மை நிலையில் உள்ள இவரைப் பற்றி கேள்விப்பட்ட பெரு நாட்டின் அரசு, தற்போது இலவச மருத்துவம் மற்றும் மாதந்தோறும் சுமார் ஐயாயிரம் ரூபாய் உதவிப்பணம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.