தீவிரவாதிகள் அட்டூழியம்: டி.வி.யில் கால்பந்து போட்டியை பார்த்த 13 பேர் கொலை
டமாடுரூ: நைஜீரியாவில் டி.வி.யில் கால்பந்து போட்டியை பார்த்த 13 பேரை தீவிரவாதிகள் குண்டு வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் யோப் மாநில தலைநகர் டமாடுரூ. இங்குள்ள கால்பந்து போட்டி ரசிகர்கள் ஒரு இடத்தில் கூடி உலக கால்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை பிரமாண்ட டி.வி.யில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் அங்கு இருந்த சிறுவர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது. தற்கொலைப்படை தீவிரவாதிகள் தான் தாக்குதலுக்கு காரணம் என்று சிலரும், வெடிகுண்டை வீசி விட்டு தீவிரவாதி ஒருவர் ஓடி விட்டதாக சிலரும் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு போகோ ஹரம் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.