பாகிஸ்தானில் அனல்காற்றுக்கு 141 பேர் பலி... கராச்சியில் அவசரநிலை பிரகடனம்
கராச்சி: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் வீசும் கடுமையான அனல் காற்றுக்கு 141 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து கராச்சி நகரில் உள்ள அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமையன்று துறைமுக நகரான கராச்சியில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. கடந்த சனிக்கிழமையன்று கராச்சியில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இதுவே இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடுமையான அனல் காற்று வீசுவதால், ஹீட் ஸ்ட்ரோக் நோய் தாக்கி 141 பேர் வரை பலியாகியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கராச்சியை சேர்ந்தவர்கள் ஆவர். அதிக வெப்பத்தினால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற நோய்க்கு பலரும் பலியாகியிருப்பதாக சிந்து மாகாண சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்
கராச்சி நகரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வரும் நிறைய பேருக்கு ஹீட் ஸ்ட்ரோக், நீர் சத்து குறைவு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளுடனையே வருகின்றனர். அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அனல் காற்று பாதிப்புக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனல் காற்றுக்கு அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் கராச்சி நகரில் உள்ள அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சிந்து மாகாண முதல்வர் சையது கயீம் அலி ஷா கூறியுள்ளார். எனவே இந்த மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரமும், தண்ணீர் விநியோகமும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மாதம் வெப்பத்தின் பாதிப்புக்கு 2500 பேர் வரை உயிரிழந்தனர் இந்தநிலையில் பாகிஸ்தானில் அனல்காற்று வீசுகிறது. வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.