2015 தான் உலகின் ரொம்ப “ஹாட்”டான வருஷமாம்... சொல்கின்றனர் விஞ்ஞானிகள்!
நியூயார்க்: உலகில் கடந்து போன ஆண்டுகளிலேயே 2015 ஆம் ஆண்டு தான் அதிக வெப்பம் பதிவான ஆண்டு என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
உலகை வாட்டி வதைக்கும் எல் நினோ பற்றி மேற்கொள்ளும் ஆய்வின் ஒரு பகுதியாக உலக வெப்பநிலை பற்றிய ஆய்வை அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கினர்.
இந்த ஆய்வில் பூமியின் வெப்பநிலையை கணக்கிட தொடங்கிய பிறகு மிக அதிகம் வெப்பம் மிக்க ஆண்டாக 2015 ஆண்டு பதிவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பமோ வெப்பம்:
1997-1998 ஆம் ஆண்டுகளில் எல் நினோ காலநிலையின்போது வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டுதான் மிக உயர்ந்த அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் எல் நினோவின் தாக்கம் 2016 ஆம் ஆண்டு வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நமக்கு நாமே:
பூமியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மனிதனால் சுற்றுப்புறத்தில் கலக்கும் மாசுக்கள் போன்றவற்றால் 136 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்ப நிலை பதிவானதாக கூறப்படுகிறது.
எல் நினோவும் காரணம்:
எல் நினோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீருக்குள் மூழ்கிடும் ஜாக்கிரதை:
பூமியின் வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி உயர்ந்தால் உலகின் முக்கிய நகரங்களான லண்டன், நியூயார்க், சிட்னி ,ஷாங்காய், ரியோடி ஜெனிரோ, மும்பை முதலானவை நீருக்குள் மூழ்கிவிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.