202 பள்ளிகள்! 34 மருத்துவமனைகள்! 1500 குடியிருப்புகள் சேதம்! ரஷ்ய ஏவுகணை அட்டாக்.. கலங்கும் உக்ரைன்
கீவ்: ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்பு கட்டடங்கள் சேதமாகி உள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போர் புரிய தெரியாத ரஷ்யாவுக்கு பொதுமக்களை கொல்ல நன்கு தெரிகிறது எனவும் உக்ரைன் விமர்சனம் செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் கருத்து மோதல்கள் மூலம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் சரணடைய மறுப்பது, பிற நாடுகளிடம் இருந்து உதவி பெறுவது ஆகியவற்றால் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இருப்பினும் பொதுமக்கள் மீதான கருணையால் ரஷ்யா சில நகரங்களில் அவ்வப்போது தற்காலிக போர் நிறுத்தம் செய்கிறது. ஆனாலும் பிற இடங்களில் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிறது.

போர் குற்றம்
இத்ற்கிடையே ரஷ்ய படைகள் அப்பாவி மக்களை கொல்வதாக உக்ரைன் நாட்டு தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் ரஷ்யா போர் விதிகளை மீறி போர் குற்றத்தில் ஈடுபடுகிறது. இதனால் உலக நாடுகள் உக்ரைனுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உலக நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா போர் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கவில்லை. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகின்றன. இதற்கிடையே தென்கிழக்கு உக்ரைனின் பெர்ட்னாஸ்க் புறநகரில் உள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினரால் கைவிடப்பட்ட ராணுவ பொருட்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்களை ரஷ்ய வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

பள்ளி மீது தாக்குதல்
இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் அருகே உள்ள ஜைடுமீர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் சிதைந்து போனது. போர் நடவடிக்கையால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதேபோல் பிற இடங்களிலும் மருத்துவமனை, பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் எவ்வளவு
இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் விலாடிமிர் புதின் அலுவலகத்தின் ஆலோசகர் தனது டுவிட்டரில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛இதுவரை ரஷ்யாவின் தாக்குதலில் மொத்தம் உக்ரைனில் 202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்பு கட்டடங்களை சேதப்படுத்தி உள்ளது. 900க்கும் அதிகமான குடியிருப்புகள் மின்சாரம், குடிநீர் வசதி இன்றி உள்ளன. பிற ராணுவத்தினரிடம் எப்படி போர் புரிய வேண்டும் என ரஷ்யாவுக்கு தெரியவில்லை. ஆனால் பொதுமக்களை எப்படி கொல்ல வேண்டும் என்பனை அறிந்து வைத்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ கட்டமைப்புகள்
இதற்கிடையே ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛ உக்ரைனின் இராணுவ உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதுவரை 26 ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன" என கூறப்பட்டுள்ளது.முன்னதாக ரஷ்யா இனப்படுகொலை செய்வதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வழக்கும் தொடர்ந்தது.
Recommended Video

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
‛‛உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது. இதற்காக இனப்படுகொலை செய்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். உக்ரைனில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும். போரை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்'' என உக்ரைன் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications