ஈரானை உலுக்கிய ஹிஜாப் போராட்டம்.. விட்டுக்கொடுக்காத அரசு.. தொடரும் மோதல்.. 3 பேருக்கு மரண தண்டனை
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த போராட்டங்களில் சில பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து அந்நாட்டு அரசு தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று மேலும் மூன்று பேருக்கு மரண தண்டனையை விதித்திருக்கிறது.
இஸ்லாமிய மதத்தின் சட்டங்களை கறாராக பின்பற்றும் நாடுகளில் ஈரானும் ஒன்று. எனவே இங்கு பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்றுதான் உடை கட்டுப்பாடும். பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணியாமல் வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 'கலாச்சார காவலர்கள்' என்கிற தனி காவல் குழுவே இருக்கிறது.
இவர்கள் இஸ்லாமிய சட்டங்களை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்களை தண்டிக்கவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. இப்படிதான் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி எனும் இளம் பெண்ணை ஹிஜாப் அணியவில்லை என்று கூறி இவர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அடுத்த நாள் அப்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.

போராட்டம்
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. தொடர் போராட்டங்கள் காரணமாக ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை தொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் பெண்கள் பலர் அடுத்தடுத்து படுகாயமடைய இவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் களத்தில் குதித்திருக்கின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல் வெடித்து வருகிறது.

17 பேர்
இந்த மோதல்கள் உச்சக்கட்டத்தையெட்டும்போது போராட்டக்காரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சில நேரங்களில் பாதுகாப்புப்படையினர் சிலர் உயிரிழந்துள்ளனர். இப்படி இருக்கையில் பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை காவல்துறை தேடி தேடி கைது செய்து வருகிறது. இப்படி கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 17 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 4 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 2 பேருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும். இந்த சூழலில்தான் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது, "ஏற்கெனவே போராட்டக்களத்தில் பாதுகாப்புப்படை வீரர்களால் பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது புதியதாக மூவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்னையை தொடங்கியது அரசுதான். எனவே அவர்கள்தான் இதனை சரி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பிரச்னையை பெரிதாக்கிக்கொண்டே செல்கிறார்கள். மக்கள் விரோத சட்டத்தை அவர்கள் ரத்து செய்ய வேண்டும். இதுதான் அனைத்திற்குமான தீர்வாக இருக்கும்" என்று கூறியுள்ளனர்.

கருணை மனு
தற்போது கைது செய்யப்பட்ட இவர்களுக்கு கீழமை நீதிமன்றங்கள்தான் தண்டனையை விதித்திருக்கிறது. எனவே இவர்கள் உச்சநீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்த நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தால் கருணை மனு அனுப்பலாம். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டால் வேறு வழியின்றி மரண தண்டனை நிறைவேற்றப்படும். இப்போராட்டங்களில் மக்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினரை பயன்படுத்த வேண்டாம் என்று ஐநா ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications