தலையிட்ட எகிப்து.. பின்வாங்கிய இஸ்ரேல்! 15 குழந்தைகள் உட்பட 44 உயிர்களை பறிகொடுத்த பாலஸ்தீன்
ஜெருசலேம்: பாலஸ்தீன் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 3 நாட்களாக நடத்திய கொடூர தாக்குதலில் 15 சிறுமிகள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
2 ஆம் உலகப்போருக்கு பிறகு அரபு நாடான பாலஸ்தீன் அருகே, யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற தனி நாடு பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து பாலஸ்தீன் நாட்டின் பகுதியை ஆக்கிரமித்து தனது எல்லையை இஸ்ரேல் விரிவாக்கம் செய்து வருகிறது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர்கள் தொடர்ந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிராக மற்ற அரபு நாடுகளும் போர்களை தொடுத்தன. மேற்கத்திய நாடுகளின் உதவியால் போர்களில் வென்ற இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி தனது படைபலத்தையும், எல்லைகளையும் பெருக்கிக்கொண்டே செல்கிறது.
ஒசூர் அருகே அரசு பேருந்து மோதல்... தலைக்குப்புற கவிழ்ந்த கார்... உயிர்தப்பிய 6 பேர்!
அத்துமீறும் இஸ்ரேல்
அதன் பின்னர் எல்லையோரங்களில் உள்ள பாலஸ்தீன் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவது, ஏவுகணைகளை கொண்டு தாக்குவது, ஜெருசலத்தில் உள்ள அக்சா மசூதிக்கு தொழுகைக்கு வரும் பாலஸ்தீன மக்களை தாக்குவது போன்ற காரியங்களில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.
இஸ்ரேல் தாக்குதல்
குறிப்பாக பாலஸ்தீனின் காசா பகுதி இஸ்ரேல் தாக்குதலால் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளையும் உயிர்பலிகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில்தான் 3 நாட்களுக்கு முன் பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவுடைய தளபதி அல்-ஜபரி, காசாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதாக இஸ்ரேலுக்கு தகவல் கிடைத்தது.
சிறுமி கொலை
இதனை அடுத்து அவரை கொல்வதற்காக மக்கள் கூட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. முதல்கட்ட தாக்குதலில் தைசிர் அல் ஜபரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதில் தனது தந்தையோடு கடைக்கு சென்ற அலா குதும் என்ற 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது உலகளவில் விவாதப்பொருளானது. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை
44 பேர் பலி
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் இடைவிடாமல் பாலஸ்தீன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. இதில் 15 குழந்தைகள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டு உள்ளர்கள். 350க்கும் அதிகமான பாலஸ்தீன் மக்கள் இதில் படுகாயமடைந்து உள்ளார்கள். இந்த தாக்குதல் கடந்த ஆண்டு பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்தியதைவிட மோசமானதாக பார்க்கப்படுகிறது.
எகிப்து தலையீடு
இந்த நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தக்கோரி எகிப்து நாடு இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன் மீதான தனது தாக்குதலை நிறுத்திக்கொண்டு இருக்கிறது. இதனை அடுத்து பாலஸ்தீன் அரசு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.