"பிரா"வுக்குள் போதை மருந்தை பதுக்கி வைத்துக் கடத்திய பலே கும்பல்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்த கலைப் பொருட்கள் மற்றும் சிலிக்கான் பிராக்கள் அடங்கிய பெட்டிகளைப் பரிசோதித்த அதிகாரிகள், அதற்குள் போதை மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
கடத்தல்காரர்கள் இப்போதெல்லாம் போதைப் பொருட்கள், தங்கம் உள்ளிட்டவற்றைக் கடத்த விதம் விதமாக யோசிக்கிறார்கள். தினுசு தினுசாக கடத்துகிறார்கள்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்த பிரா பார்சல்களை பிரித்துப் பார்த்த அதிகாரிகள் அதில் போதை வஸ்துவாக பயன்படுத்தப்படும் மீத்தைலம்பீட்டமைன் என்ற மருந்துப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
அந்த செயற்கை பிராக்களுக்கு உள்ளே போதை மருந்து மிக நுனுக்கமாக மறைத்து வைத்துள்ளது கடத்தல் கும்பல். இவற்றின் மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 900 மில்லியன் ஆகும்.
இந்தக் கடத்தல் தொடர்பாக ஹாங்காங் நாட்டு பாஸ்போர்ட்டுடன் பயணித்த நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த போதை வஸ்துக்களை சீனாவிலிருந்து இவர்கள் கடத்தி வந்துள்ளனர். இது திரவ நிலையிலான போதை வஸ்து ஆகும்.
ஆஸ்திரேலியாவில் இந்த போதை மருந்துக்கு அதிக அளவில் அடிமைகள் உள்ளதால், இவை பல்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகிறது. இதையடுத்து விமான நிலையங்கள், சரக்குக் கப்பல்களில் ஆஸ்திரேலிய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.